மே தினம் தொழிலாளர்களுக்கான நாள் என்பது எல்லோர்க்கும் தெரியும், இதன் ரிஷிமூலம், நதி மூலம் தெரியுமா உங்களுக்கு. தெரிந்தால் சந்தோஷம், தெரியவில்லை என்றால் யாரிடாமாவது கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்; இல்லையெனில் இந்த இடுகையின் முடிவில் அது பற்றி சொல்கிறேன்…
இந்த இடுகை தொழிலாளர் தினத்தை பற்றியது அல்ல, உழைப்பாளர் சிலை பற்றியது. நம்மில் பலர் சென்னை கடற்கரையில் உள்ள தொழிலாளர் சிலையை பார்த்திருப்பீர்கள், சிலை அருகே நின்று புகைப்படம் எடுத்து இருப்பீர்கள். இந்த காலத்தால் அழியாத சிலையை செய்தது யார் தெரியுமா? அவரைப் பற்றிய சில செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
அவர் பெயர் தேவி பிரசாத் ராய் சௌத்ரி, வங்கத்தை சேர்ந்த இவர் அடிப்படையில் ஒரு ஓவியர் ஆனால் சிலை வடிப்பதிலும் ஆர்வம கொண்டவர். மேலும் இவர் ஒரு எழுத்தாளர், புல்லாங்குழல் இசை வித்தகர், மல்யுத்த வீரர், வேட்டைக்காரர் என்று பன்முகத் தன்மை கொண்டவர்.

4 தொழிலாளர்கள் ஒரு கடினமான பாறாங்கல்லை உந்தி தள்ளுவது போன்ற இந்த சிலை வெண்கலத்தால் உருவாக்கப்பட்டது. உழைப்பாளர்களின் கோவணத் துண்டோடு கூடிய இறுகிய உடல், உழைப்பின் களைப்பு, விடாமுயற்சி, ஒற்றுமை, மனோபலம் மேலும் உழைப்பின் உன்னதத்தை நம் பார்வைக்கு இம்மியளவும் பிசகாமல் எடுத்துக் காட்டியிருக்கிறார் ராய். சுதந்திர இந்தியாவின் கரடு முரடான பாதையில் நாம் எதிர் கொள்ள வேண்டிய கடமையை(உழைப்பை) உருவகப்படுத்துவதாக இந்த சிலை அமைக்கப்பட்டிருக்கிறது. அது நமக்கு இருக்க வேண்டிய மன வலிமையையும், ஒற்றுமையை எடுத்தியம்புவதாக அமைந்திருக்கிறது.

D.P.ராய், ஹிரன்மாய் ராய் சௌத்ரியிடம் சிலை வடிப்பதை கற்றார், அபாநிந்த்ரநாத் தாகூர் என்பவரிடம் WATER COLOUR முறையில் ஓவியத்தை கற்றார் பின் மேற்கத்திய பாணியில் ஆர்வம கொண்டு அவ்வழியில் தன் பணியை தொடர்ந்தார். சிலை வடிப்பதில் IMPRESSIONISM வகையின் கீழ் வரும் AUGUSTIN RODIN போன்றவர்களின் பால் ஈர்ப்பு கொண்டு நவீன மேற்கத்திய சிலை வடிப்பாளர்களின் வழியில் ராய் தன் பணியை தொடர்ந்தார். ராயின் முக்கிய அம்சமாக கருதப்படுவது செதுக்குவதை காட்டிலும் வார்த்து எடுத்தலே ஆகும். இவரின் பல படைப்புகள் உலக சிறப்பு வாய்ந்ததாகும், சென்னையில் உள்ள உழைப்பாளர் சிலை, காந்தி சிலை, பாட்னாவில் உள்ள மார்ட்டிர்ஸ் மெமோரியல்(வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது தேசியக் கொடியை ஏற்ற முற்பட்டு உயிர் துறந்த 7 இளைஞர்களின் நினைவாக உருவாக்கப்பட்டது), விவேகானந்தர் சிலை, தண்டி யாத்திரையை சித்தரிப்பது போன்ற கியாரா மூர்த்தி சிலை என பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

இவர் தன் முதல் ஓவியக் கண்காட்சி 1933-34ல் கொல்கத்தாவில் நடத்தினார், 1937ல் ஆங்கிலேய அரசாங்கத்தால் MBE பெற்றார், 1953ல் லலித் கலா அகாதமியின் முதல் தலைவராகவும் பின்னர் 1955ல் UNESCOவின் ART SEMINARக்கு தலைவரவாகவும், இயக்குனராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்கு 1958ல் பத்மா பூசன் விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டார். ராய் சென்னை ஓவியக் கல்லூரியின் தலைவராகவும் இருந்தார் அச்சமயம் தான் உழைப்பாளர் சிலை வடித்தார் என்பது கேள்வி, இது தவிர கடற்கரையின் மறுமுனையில் இருக்கும் காந்தியின் சிலையும் இவரால் வடிக்கப்பட்டதே.
மே தினத்தை பற்றித் தெரியாதவர்களுக்கு…
அமெரிக்காவில் ஒரு நாளில் எட்டு மணி நேரம் மட்டுமே உழைக்க முடியும், மற்றும் வார விடுமுறை போன்ற சீர்திருத்தங்களை அமலாக்க கோரி 1886ல் மே 1ம் தேதியன்று தேசம் தழுவிய ஒரு கிளர்ச்சி செய்தனர். இதில் சிகாகோவில் கிளர்ச்சியாளர்களுக்கும் காவலர்களுக்கும் இடையே பெரிய மோதல் ஏற்பட்டது, மேலும் ஹேமார்கட் ஷ்கொயரில் குண்டுவெடிப்பு ஏற்பட்டு பலர் மாண்டனர். இந்த கிளர்ச்சியின் போது இறந்த தொழிலாளர்கள், மற்ற தொழிலாளர்களால் உலகம் முழுதும் மாவீரர்களாக போற்றப்பட்டனர். இதைத் தொடர்ந்து 1989ல் பாரிசில் நடந்த சர்வதேச சோசலிஸ்ட் காங்கிரஸ் கூட்டத்தில், மே 1ம் தேதியை தொழிலாளர் தினமாகவகும், ஒரு நாளைக்கு 8 மணி நேர உழைப்பு, வார விடுமுறையை அமல்படுத்த தீர்மானம் போட்டு அதை மற்ற நாடுகள் ஏற்கும் வண்ணம் செய்தனர்.
துணுக்கு செய்தி
மே டே என்பது தொழிலார் தினமாக அறியப்படும் நிலையில், விமானம், கப்பல் போன்ற வாகனங்களில் நெருக்கடியான நிலையில் உதவி கோரும் போது இந்த பதத்தை அதாவது மே டே என தனது அருகாமையில் உள்ள தளத்திற்கு தெரியப்படுத்தி உடனடியாக உதவியை பெறுகின்றனர். இது ஒரு பிரெஞ்சு வார்த்தை m’aider ( Venes m’aider) என்பதில் இருந்து வந்தது. இதன் அர்த்தம் ஆங்கிலத்தில் COME HELP ME. முதன் முதலில் லண்டனில் குரோயோடின் விமானதளத்தில் ஒரு சீனியர் ரேடியோ ஆபீசர் ஒருவரால் கூறப்பட்டு அது இன்றளவும் புழக்கத்தில் உள்ள ஒரு வார்த்தையாக மாறிவிட்டது.