Posts Tagged ‘எம்டன் மகன்’

முதல் உலகப் போரை பற்றி நாம் நிறைய படித்திருக்கிறோம், கேள்விப்பட்டிருக்கிறோம். இந்தியாவில் இந்த போரினால் தாக்குதல் நடை பெற்றது தெரியுமா?  ஜெர்மனி இந்தியாவை தாக்கியது பற்றி கேள்விபட்டு இருக்கிறீர்களா? இந்தியாவின் எந்தப்பகுதி தாக்கப்பட்டது?  இந்த எல்லா கேள்விக்கும் பதிலை  உங்கள் வீட்டில் யாராவது பெருசுகள் இருந்தால் உடனே உரக்க சொல்லும் எம்டன் தாக்குதலை பற்றி.  

யார் இந்த எம்டன், சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த எம்டன் மகன் திரைப்படத்திற்கு பிறகு இந்தத் தலைமுறையில் சிலர் எம்டனை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள்(படத்தில் இதுபற்றி எதுவும் சொல்லவில்லை ஆனால் பெயர்க்காரணம் பற்றி கூறும்போது சில பத்திரிகைகளில் எம்டனை பற்றிய தகவல் வெளியானது). தெரியாதவர்களுக்கு இந்த இடுகை மூலம் நான் தெரியப்படுத்துகிறேன்.

எஸ்.எம்.எஸ் எம்டன்  என்பது ஜெர்மனியக்  கடற்படையின் ஒரு கப்பல். 1908ம்  ஆண்டில் போலந்து நாட்டின் “டான்ஜிக்” என்ற கப்பல் கட்டும் துறையில் ஜெர்மானியக் கப்பல் நிபுணர்களால் கட்டப்பட்ட ஒரு போர்க் கப்பல் ஆகும்.

எம்டன் அலை வீசும் கடலிலும் துரிதமாகச் செல்லக் கூடியது. இதில் முதல்தரமான பீரங்கிகள் சுமார் 20 பொருத்தப்பட்டு இருந்தன.  முதலாம் உலகப் போரின் போது 1914ல் பல நாடுகளாலும் வியந்து பார்க்குமளவுக்கு இக்கப்பலின் போரிடும் திறன் இருந்தது. 1914ன் இறுதிப் பகுதியில் எம்டன் இந்தியப் பெருங்கடல் பகுதியில் மேற்கத்தியக் கூட்டுப் படைகளின் 25 கப்பல்களை அழித்தோ அல்லது கைப்பற்றியோ இருக்கிறது.

1914 ஆகஸ்ட் இறுதியில் ‘எம்டன்’ சீனக் கடற்பகுதியில் தனது சாகசத்தைக் காண்பித்துவிட்டு, இந்தியக் கடல் எல்லைக்குள் நுழைந்தது. அதனுடைய திடீர்த் தாக்குதல் வியப்பானது. ஆங்காங்கு தனது கொடியை இடத்திற்குத் தக்கவாறு மாற்றிக் கொண்டு அந்தந்த நாட்டுத் துறைமுகங்களில் தனக்கு வேண்டிய நிலக்கரி மற்றும் வேறு சாதனங்களைத் தந்திரமாகப் பெற்றுக்கொள்ளுமாம்.

கார்ல் வான் முல்லர் தலைமையில் 1914, செப்டம்பர் 22ம் நாள் இரவு இந்தியாவின் மதராஸ் நகரை அடைந்தது  எம்டன். சென்னை  துறைமுகப் பகுதியை அடைந்தவுடன், சிறிது நேரம் நிலைமையை கண்காணித்தப் பின்னர் சரியாக இரவு 9.30 மணிக்கு தாக்குதலை நடத்த வான் முல்லர் ஆணையிட்டார். யாரும் எதிர்பாராத நேரத்தில், சென்னை கடற்கரையில் இருந்து சில ஆயிரம் அடி தூரத்தில் நின்று கொண்டு, குண்டுகளைப் பொழிந்தது எம்டன். முதலில் பர்மா எண்ணெய்க் கம்பனிக்குச் சொந்தமான எண்ணெய்த் தாங்கிகள் மீது குண்டுகளை வீசியது. முதல் 30 சுற்றுத் தாக்குதல்களில் பல தாங்கிகள் தீப்பற்றி எரியத் தொடங்கின. அடுத்ததாக துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறிய சரக்குக்கப்பல் ஒன்றைத் தாக்கி மூழ்கடித்தது. அக்கப்பலில் இருந்த 26 மாலுமிகள் இத்தாக்குதலில் காயமடைந்தனர். 5 மாலுமிகள் உயிரிழந்தனர். இரவு 10 மணி வரை இத்தாக்குதல் நடைபெற்றது. அதன் பின்னரே ஆங்கிலேயக் கரையோரக் காவல் படையினர் பதில் தாக்குதலை ஆரம்பித்தனர். ஆனாலும், அதற்குள் வெற்றிகரமாக தனது தாக்குதலை முடித்தவுடன் எம்டன் திரும்பி விட்டது. மொத்தம் 125 குண்டுகளை “எம்டன்” அன்றையை இரவு வீசியிருந்தது. ஒரு சில நிமிடங்கள் மட்டுமே நீடித்த தாக்குதலால் அப்போதைய மெட்ராஸ் நகரமே கதிகலங்கிப்போனது.

எம்டன் மீண்டும் தாக்கும் என்ற அச்சத்தில் நகரை விட்டு பலர் வெளியேறினார்கள். இத் தாக்குதலில் பலத்த சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றாலும் இந்தியாவில் பல ஆண்டுகளாக ஆட்சிபுரிந்த  வெள்ளையர்களின் கவுரவத்தை குலைப்பதாக இந்நிகழ்வு அமைந்தது. முதலாம் உலகப் போரின் போது இந்தியாவில் மதராஸ் நகரம் மட்டுமே தாக்குதலுக்கு இலக்கான நகரம் என்பது குறிப்பிடத்தக்கது.

இக்கப்பல் கடைசியாக ஆஸ்திரேலியாவின் எச்.எம்.ஏ.எஸ். சிட்னி கப்பலினால் கொக்கோஸ் என்ற இடத்தில் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது

சென்னையில் நடந்த எம்டன் தாக்குதலுக்கு பிறகு எம்டன் என்ற சொல் கெட்டிக்காரன் என்ற பொருளோடு, அவன் சரியான எம்டனாக இருக்கான் அதாவது வருவதும் போவதும் தெரியாமல் இருக்கான் என்று பொருள் பட கூறுவார்கள். இச்சொற்றொடர் எம்டன் கப்பல் திடீர் திடீர் என்று தோன்றி ஆங்கிலேயருக்கு போக்கு காட்டியதால் ஏற்பட்ட ஒரு வட்டார சொல் ஆகியது.

எம்டனின் தாக்குதல்கள்  பற்றிய ஒரு ஆவணப்படத்தை இந்த இடுகையின் பின் இணைப்பாக  இணைத்திருக்கிறேன்.

நன்றி: விக்கிப்பீடியா